tet books

time


follow me on fb

Friday, April 12, 2013

TNPSC மாறிய பாடதிட்டம்... மீண்டும் மாறியதா? புதிய தகவல்கள்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. முன்பு போல தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
=================================
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அதிகாரிகளும் டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது போட்டித்தேர்வுகளை நடத்துகிறது.

இந்த நிலையில், நீண்ட காலமாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படாததாலும், இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப ஊழியர்களை தேர்வுசெய்வதற்காகவும் கடந்த மாதம் பாடத்திட்டம் அடியோடு மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளில் தமிழ்மொழி தொடர்பான கேள்விகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டு அதற்குப் பதிலாக ‘பகுத்து ஆராயும் திறன்’ (ஆப்டிடியூட்) புதிதாக சேர்க்கப்பட்டது.

குரூப்–2 தேர்வில் தமிழ்மொழி தொடர்பான 100 கேள்விகள் முற்றிலும் நீக்கப்பட்டன. அதற்குப் பதிலாக பொது அறிவு கேள்விகளின் எண்ணிக்கை 100–லிருந்து 150 ஆக அதிகரிக்கப்பட்டு, ஆப்டிடியூட் தொடர்பாக 50 வினாக்கள் புதிதாக சேர்க்கப்பட்டன. அதோடு அறிவியல் மற்றும் பொது அறிவு பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

புதிய பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்தன. பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மாணவ–மாணவிகளும் டி.என்.பி.எஸ்.சி.யிடம் முறையிட்டனர். அரசுக்கும் மனுக்கள் அனுப்பினார்கள்.

தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் கம்யூனிஸ்டு மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி.க்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் வைகைச்செல்வன் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களின் அவசர கூட்டம் நடந்தது. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தலைமையில், செயலாளர் மா.விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்த கூட்டம், மாலை 6 மணிக்கு மேல் நீடித்தது.

திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்றும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 17–ந் தேதி (புதன்கிழமை) வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீப காலமாக டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசு பணியில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழை விருப்ப பாடமாக தேர்வு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 200 வினாக்கள் கொண்ட குரூப்–2, குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளில் 100 கேள்விகள் தமிழ் சம்பந்தப்பட்டது என்பதால் அதில் அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் தேர்வில் எளிதில் வெற்றிபெற்று, அரசு பணியில் சேர முடிந்தது.

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links